காதலை சொன்ன அந்த கணத்தில்,
காதலி காட்டும் அமைதி,
பெண்மையின் ஒரு அழகு..
உயிர் பிடித்து நிறுத்த,
அரை துண்டு ரொட்டியை ,
ஏக்கமாய் பார்க்கும் குழந்தையின் அமைதி,
வறுமையின் ஒரு அவதி..
இறப்பு சேதி கேட்டு,
கண்ணீர் துளி வெளியேறும் முன்,
வெளியேறும் அமைதி,
அதிர்ச்சியின் ஒரு பகுதி..
செடி,கொடி,மரங்களை வீழ்த்தி விட்ட வெற்றியில்,
மழை காட்டும் அமைதி,
வெற்றியின் ஒரு ஆரவாரம்..
மலை மீதிருந்து வீழ்ந்து விட்ட போதிலும்,
அருவி காட்டும் அமைதி,
தோல்வியின் ஒரு கீதம்..
உயிர் கொடுத்து ,உயிர் கொடுத்த தாயின்,
அந்த கண பொழுதின் அமைதி,
தாய்மையின் ஒரு முழு நிறைவு..
கரைந்தோடிய தினங்களில் கரைந்து போன
கல்லூரி மாணவனின் கடைசி தின அமைதி,
நட்பின் ஒரு இரங்கல் கூட்டம்..
துடி துடித்த இதயமும்,
ரத்தம் பாய்ச்சிய நரம்புகளும்
இறந்த பின் காட்டும் அமைதி,
வாழ்வின் ஒரு நிறைவு விழா..
இரவுடன் போர் புரிந்து,
மீண்டும் ஒரு விடியல் தரும்
காலையின் அமைதி,
நம்பிக்கையின் ஒரு முன்னோட்டம்..
வெடிச்சத்ததின் இடையில்
மனைவியின் கடிதத்தைப் படிக்கும்
போர் வீரனின் அமைதி,
பிரிவின் ஒரு பரிதவிப்பு..
தேசிய கீதத்திற்க்கு
எழுந்து நிற்க்கும் 52 நொடிகளின் அமைதி,
இன்றைய அவசர உலகத்தின் ஒரு ஆச்சர்யம்..
***sunil sj***

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக